இந்தியா

ராமர் கோயில் காணிக்கை திருட்டில் கைதான முக்கிய நபர் டின்னு யார்? - ஆட்டோ ஓட்டுநர் முதல் ‘விஎச்பி’ நிர்வாகி வரை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டில் தொடர்புடையவர்களில் முதன்மை நபரான டின்னு எனும் ராம் ஷங்கர் யாதவ் (51) பற்றி பல முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேநீர் கடை நடத்திய இவர், பின் ஆட்டோ ஓட்டுநராக இருந்து, விஎச்பி நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். இதன் மீது ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகி கிருஷ்ண மோஹன் பெயரில் ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் புகார்கள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கில் முதல் நடவடிக்கையாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டின்னு என்கிற ராம் ஷங்கர் யாதவ், அனுகல்ப் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, கருணேஷ் பாண்டே, லவ்குஷ் மிஸ்ரா, ராம சங்கர் மிஸ்ரா, சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் மனிஷ் யாதவ் ஆகிய 8 பேரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் முக்கிய நபராக டின்னு யாதவ் கருதப்படுகிறார். சாதாரண தேநீர் கடை நடத்தியும் ஆட்டோ ஓட்டியும் வந்த இவர், இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியாகி உள்ளார்.

இது குறித்த பல முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அயோத்தியின் ஸ்வர்க் துவார் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி டின்னு யாதவ். இவரது தந்தை துளசிராம் யாதவ், அயோத்தியின் நயா காட் அருகே நடத்திய சிறிய தேநீர் கடையில் டின்னுவும் பணியாற்றி வந்துள்ளார்.

டின்னு யாதவின் வீடு, ஸ்வர்க் துவார் துளசி பூங்காவுக்குப் பின்னால் உள்ள பகுதியில், ராமர் கோயிலிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1988 இல் ஓட்டுநர் உரிமம் பெற்று ஆட்டோ ஓட்டத் துவங்கி உள்ளார் டின்னு யாதவ்.

பிறகு, 1993-ல் விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இணைந்த இவர், 2019 இல் ராமஜென்மபூமி மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடன் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் பணியாற்ற நியமிக்கப்பட்டார். அப்போது, அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராயின் வாகன ஓட்டுநராகவும் டின்னு இருந்துள்ளார். இதன்மூலம், அவரது நம்பிக்கையை பெற்ற டின்னுவுக்கு ராமர் கோயிலில் செல்வாக்கு பெருகியது.

இதை வைத்து அவர் அறக்கட்டளையின் நேரடி பணிகளில் முக்கியமானவராக இருந்துள்ளார். காணிக்கை அறையின் சாவிகூட டின்னுவிடம் இருந்ததாகத் தெரிகிறது.

சம்பக் ராயின் பெயரால் கோயிலுக்கு வந்த பல விஐபிக்களுக்கு டின்னு தரிசனம் செய்ய உதவி வந்துள்ளார். பாதுகாப்பு பணிகளிலும் இவர் முக்கியப் பணியாற்றியுள்ளார். வாக்கி டாக்கி மூலம் கோயிலின் அனைத்து வாயில் பாதுகாவலர்களுக்கும் டின்னு வாய்மொழியாகவே உத்தரவுகளைப் பிறப்பித்து வந்துள்ளார். சம்பக் ராயின் நம்பிக்கைக்கு உரியவராக இவர் மாறியதே இதற்குக் காரணம்.

டின்னுவுக்கு அயோத்தியில் ஒரு சொகுசு பங்களா இருந்துள்ளது. டின்னுவின் பெயரில் அயோத்தியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலங்களும் இருந்துள்ளன. இவை பற்றியப் புகார்கள் ஊடகங்களில் வெளியானபோது, அவற்றுக்கு விளக்கம் அளித்த டின்னு, ’நான் விஎச்பிக்காகப் பணியாற்றிய அதே வேளையில், பகுதிநேரமாக ஆட்டோ ஓட்டி வந்தேன். ஆட்டோ மூலம் எனக்குக் கொஞ்சம் வருமானம் கிடைத்தது.

விஎச்பிக்காக நான் செய்த பணிக்கான ஊதியமும் எனக்கு வழங்கப்பட்டது. ஆட்டோ மூலம் ஈட்டிய பணம் அனைத்தையும் சேர்த்து வைத்து, 2008-ல் இந்த நிலத்தை வாங்கினேன். 2015-16 காலகட்டத்தில் நாங்கள் இந்தக் கட்டிடத்தைக் கட்டினோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், உண்மையிலேயே வெளியில் தெரிந்த அளவுக்கு டின்னு, சம்பக் ராயின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாரா என்பது திருட்டுக்குப் பின் கேள்விக்குறியாதாகி விட்டது. இது வரும் நாட்களில் எஸ்ஐடி விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்கள்:

கைதான எட்டு பேரும் இன்று காலை அயோத்தி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் கைப்பற்றப்பட்டதாக ரூ,79,85,493 நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இன்று அரசு விடுமுறை என்பதால் 8 பேரும் திங்கள் அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது அனைவரும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட உள்ளனர்.

SCROLL FOR NEXT