புதுடெல்லி: பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டம், மம்டோட் கிராமத்தை சேர்ந்தவர் சோனா சிங். இவரது மனைவி சந்தோஷ் ராணி. பாகிஸ்தான் எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மம்டோட் கிராமம் உள்ளது. அங்கு ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சோனா சிங் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மம்டோட் கிராமத்தில் சோனி சிங்கின் விவசாய நிலத்தில் இந்திய ராணுவ வீரர்கள் முகாமிட்டு பாகிஸ்தானுக்கு எதிராக போரில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் ராணுவம் குண்டு மழையை பொழிந்து கொண்டிருந்தபோது, அதற்கு அஞ்சாமல் சோனா சிங்கின் 10 வயது மகன் ஷ்ரவன் சிங் துணிச்சலாக போர் முனைக்குச் சென்று இந்திய ராணுவ வீரர்களுக்கு குடிநீர், பால், மோர், தேநீர், உணவு வகைகளை வழங்கினார். இதற்காக ராணுவத்தின் சார்பில் இளம் சிவில் வீரர் என்ற விருது ஷ்ரவன் சிங்குக்கு வழங்கப்பட்டது.
இந்த சூழலில் வீர, தீர செயலுக்காக அவருக்கு நேற்று முன்தினம் தேசிய சிறார் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். இதுகுறித்து ஷ்ரவன் சிங் கூறும்போது, “நான் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கிறேன். ஆபரேஷன் சிந்தூரின்போது ராணுவ வீரர்கள் எங்கள் கிராமத்தில் முகாமிட்டனர். அவர்களுக்கு தேநீர் உள்ளிட்ட பானங்கள் மற்றும் உணவு வழங்கினேன். இதை பாராட்டி எனக்கு விருது வழங்கப்பட்டு இருக்கிறது. நான் பெரியவனாக வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றுவேன்’’ என்று தெரிவித்தார்.
சோனா சிங் கூறும்போது, “எனது மகனுக்கு 4 வயதாக இருக்கும்போது நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவனது மருத்துவ சிகிச்சைக்காக அதிக தொகையை செலவு செய்கிறேன். எனது ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனது மகன் ராணுவ வீரர்களுக்கு தேநீர் வழங்கினார். இதை பாராட்டி எனது மகனின் மருத்துவச் செலவையும், படிப்பு செலவையும் ராணுவமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. நான் என்றென்றும் இந்திய ராணுவத்துக்கும் மத்திய அரசுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்’’ என்று தெரிவித்தார்.