புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘மேட்ரிஸ் - ஐஏஎன்எஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில், திரிணமூல் காங்கிரஸ் 155-170, பாஜக 100-115, மஜ்லிஸ் 5-6 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று கணிக்கப்பட்டாலும், இம்முறை திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம் குறித்து இக்கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியை பின்னுக்குத் தள்ளி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் என்டிஏ 114-127 இடங்களையும், திமுக, 104 - 114 இடங்களையும், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துக்கு 6 - 12 இடங்களும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறியுள்ளது.
அசாமில் பாஜக பெரும்பான்மையான இடங்களை வென்று ஆட்சியை தக்கவைக்க வாய்ப்புள்ளதாகவும் கேரளாவில் இடது முன்னணி, காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நீடிப்பதாக கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.