கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 35 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, கடந்த மே 9ம் தேதி சுவேந்து அதிகாரி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார். அவருடன் திலிப் கோஷ், அக்னிமித்ரா பால், அஷோக் கீர்த்தனியா, நிசித் பிரமாணிக், சுதிராம் துது ஆகிய 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், என்டிஏ முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், மேற்கு வங்க அமைச்சரவை இன்று விரிவாக்கப்பட்டுள்ளது. தீபக் பர்மன், அர்ஜுன் சிங், ஷங்கர் கோஷ், கவுரி சங்கர் கோஷ், தபஸ் ராய், மனோஜ் குமார் ஓரன், ஜகந்நாத் சட்டோபாத்யாய, அஜோய் போத்தார், ஸ்வபன் தாஸ் குப்தா, ஷரத்வாத் முகர்ஜி, கல்யாண் சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். மக்கள் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அனைவருக்கும் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இவ்விழாவில், முதல்வர் சுவேந்து அதிகாரி, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.