பிரதமர் மோடி 

 
இந்தியா

“மத்திய கிழக்கில் இந்தியர்களை தவிக்க விடமாட்டோம்!” - பிரதமர் மோடி உறுதி

வெற்றி மயிலோன்

கொச்சி: “இந்தியா இப்போது தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “போர் குறித்த நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியா முழுவதும் வாழும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களுக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறோம்.

தற்போதைய பதற்றங்களின்போது வளைகுடா நாடுகள், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுகின்றன. அதற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

          

தற்போதைய மேற்கு ஆசிய நெருக்கடியில் அரசியல் விளையாடுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை அரசியலாக்கக் கூடாது” என்றார்.

ஈரான் - அமெரிக்க போரால் மேற்கு ஆசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துகள் வந்துள்ளன.

இன்று (புதன்கிழமை) அதிகாலை இஸ்ரேல் மற்றும் பல வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் புதிய அலையை ஈரான் தொடங்கியது. டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பிற பகுதிகளில், மூன்று ஈரானிய வான்வெளி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கப் படைகளால் கூட்டாக இயக்கப்படும் ஒரு முக்கிய தளமான பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தை நோக்கிச் சென்ற ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதியின் கிழக்கு நகரமான ஹஃபர் அல்-படின் மீது இரண்டு ட்ரோன்களையும் வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தின.

ஓமனுக்கு வடக்கே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு சரக்குக் கப்பல் தாக்கப்பட்டது. இதனால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு ஈரான் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல் கைமா அருகே ஒரு சரக்கு கப்பலின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பாரசீக வளைகுடாவில் மற்றொரு கப்பலும் ஒரு ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதுவரை சவுதியில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், 122 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT