கேரள முதல்வர் வி.டி.சுதீசன் 

 
இந்தியா

“வயநாடு நிலச்சரிவுக்கான காரணங்கள் ஆராயப்பட்ட பிறகே சுரங்கப் பணிகள் தொடங்கப்படும்” - கேரள முதல்வர்

மோகன் கணபதி

திருவனந்தபுரம்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கான காரணங்கள் ஆராயப்பட்ட பின்னரே, அங்கு மீண்டும் சுரங்கப் பணிகள் தொடங்கப்படும் என்று கேரள முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. அரசு இது குறித்து தொழில்நுட்பம் சார்ந்தும், சட்டம் சார்ந்தும் விரிவான ஆய்வை மேற்கொள்ளும். அதைத் தொடர்ந்து இந்த சம்பவத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். கட்டுமான நிறுவனம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் விதிகளை முறையாக பின்பற்றியதா என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்வோம்.

மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான வயநாடு மாவட்ட ஆட்சியர், அந்த இடத்தில் குவிக்கப்பட்டு கிடந்த மண் முழுவதையும் அகற்ற கடந்த மாதமே உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் ஒப்பந்ததாரர்கள் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சரும் பிற அதிகாரிகளும் அந்த இடத்தைப் பார்வையிட்டு, பேரிடர் அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரித்திருந்தனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைச் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்கும். உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்வதற்கான ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.

கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி) நுழைவாயில் அருகே, நேற்று (ஜூலை 7) பெய்த கனமழையால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. கல்லாடியில் உள்ள மீனாட்சி பாலத்துக்கு அருகே நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காணாமல் போன 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT