புதுடெல்லி: தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை, 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார். இதேபோல யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த ) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார்.
இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இவை தொடர்பாக ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிகள் இடையே சுமார் 40 நிமிடங்கள் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மசோதாக்களை விவாதத்துக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடந்தது. மசோதாக்களுக்கு ஆதரவாக 251 பேரும், எதிராக 185 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் 3 மசோதாக்களும் மக்களவையில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து 3 மசோதாக்கள் மீதான விவாதம் தொடங்கியது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விவாதத்தை தொடங்கிவைத்தார். அவர் கூறியதாவது: மகளிருக்கான இடஒதுக்கீட்டை சட்ட மேதை அம்பேத்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
தற்போது நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத எம்.பி. இடங்கள் அதிகரிக்கப்படும். 2029 மக்களவைத் தேர்தலின்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமலாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். அதே போல, கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17-ல் இருந்து 26 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் அதிகரிக்கும். கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்றே தற்போதைய மசோதாவும் உள்ளது. எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒரு புள்ளிகூட கூடுதலாக சேர்க்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இண்டியா கூட்டணி எதிர்ப்பு: விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:
கவுரவ் கோகோய் (காங்கிரஸ்): மகளிர் இடஒதுக்கீட்டை முழுமனதோடு ஆதரிக்கிறோம். ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டையும் மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தையும் இணைத்து குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முடியும் முன்பாகவே மக்களவை இடங்கள் 850 ஆக அதிகரிக்கப்படும் என்று எவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது?
தேஜஸ்வி சூர்யா (பாஜக): மறுவரையறையில் தென்மாநிலங்களுக்கான இடங்கள் குறையும் என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத இடங்கள் அதிகரிக்கப்படும்.
அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி): மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதை முழுமனதோடு வரவேற்கிறோம். ஆனால் இந்த விவகாரத்தை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது.
டி.ஆர்.பாலு (திமுக): 3 மசோதாக்களும் சாண்ட்விட்ச் மசோதாக்கள் ஆகும். இந்த மசோதாக்களை திமுக மிக கடுமையாக எதிர்க்கும்.
அசாதுதீன் ஓவைசி (ஏஐஎம்ஐஎம்): மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதாக்கள் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானவை. இவ்வாறு அவர்கள் பேசினர். ஆளும் பாஜக கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அடுத்தடுத்து பேசினர். அவர்களுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. மக்களவையில் இன்றும் விவாதம் தொடர்கிறது. விரிவான விவாதத்துக்குப் பிறகு மசோதாக்கள் மீது இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
மூன்றில் 2 பங்கு ஆதரவு தேவை: மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. மக்களவையின் மொத்த பலம் 543 ஆகும். இதில் 3 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 540 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 293 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் 233 எம்.பி.க்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவின் அடிப்படையில் மக்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற 360 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
தற்போதைய சூழலில் பாஜக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையின் மொத்த பலம் 245. இதில் ஒரு இடம் காலியாக உள்ளது. அவையில் 244 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதில் பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு 141 எம்.பி.க்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளிடம் 83 எம்.பி.க்கள் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்ற வகையில்மசோதாக்களை நிறைவேற்ற 163 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.