புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் தங்கள் அறிவையும், திறனையும், நாட்டுக்கு சேவை செய்வதில் அர்ப்பணிக்க வேண்டும். கல்வி என்பது வெறும் பட்டங்களை வழங்குவதோடு நின்றுவிடாமல், நற்பண்புகளை வளர்ப்பதாகவும், அறிவை வலுப்படுத்துவதாகவும், ஒவ்வொரு தனிமனிதனும் தன் சொந்தக் காலில் நிற்பதற்குத் தேவையான தன்னம்பிக்கையைத் தருவதாகவும் அமைய வேண்டும்.
கல்வி, முறையான பயிற்சி மட்டுமே, 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமர் மோடியின் தொலை நோக்கை இளைஞர்கள் நனவாக்க உதவும். நாலந்தா, தட்சசீலம் போன்ற கல்வி மையங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, கவுடில்லியரின் அர்த்த சாஸ்திரம், திருவள்ளுவரின் திருக்குறள் போன்றவை கற்றலைச் சமூக மற்றும் அறநெறி வாழ்வின் மையமாக முன்னிறுத்தி வந்துள்ளன. உண்மையான கல்வி என்பது பட்டம் பெறுவது மட்டும் அல்ல, அது நம் நடத்தையையும் குணத்தையும் செம்மைப்படுத்துகிறது.
விவாதம், ஆலோசனை, முரண்பாடுகள் ஆகியவை ஆரோக்கியமான ஜனநாயகத்தின் முக்கியமான அம்சங்கள். இவை இறுதியில் ஒரு முடிவுக்கு வழிவகுக்க வேண்டும். முடிவெடுத்தவுடன், அவற்றை அமல்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்த முடியும்.
உண்மையை அறிவதில் நேர்மை, சமத்துவமின்மையைக் குறைக்க சமூக உள்ளடக்கம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான தீவிர பங்களிப்பு ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகளை பட்டதாரிகள் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் எப்போதும் பெற்றோரையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.