பெங்களூரு: கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் நடந்த ஊழல் விவகாரம் காரணமாக அம்மாநில் அமைச்சர் பி.நாகேந்திரா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2024-ம் ஆண்டு அரசு கட்டுப்பாட்டில் உள்ள வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளராக இருந்த சந்திரசேகரன் குற்றம்சாட்டினார். அந்த ஊழலுக்கு உதவாததால் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜி சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த பி.நாகேந்திரா அதே ஆண்டு ஜூனில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திரா, ரெய்ச்சூர் காங்கிரஸ் எம்எல்ஏவும், பழங்குடியினர் ஆணையத்தின் தலைவருமான பசனகவுடா தட்டல், பி.நாகேந்திராவின் உதவியாளர் ஹரீஷ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் நாகேந்திராவை கைது செய்து, விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் 6 மாதங்களுக்கு பிறகு பி.நாகேந்திரா ஜாமீனில் வெளியே வந்தார். தனக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்தார்.
மீண்டும் பதவியேற்பு
இதனால் கடந்த 3ம் தேதி பி.நாகேந்திரா மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இதனை கண்டித்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் சட்டப்பேரவை மற்றும் மேலவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா தலைமையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது அசோகா பேசுகையில், “பட்டியல் பழங்குடிகளின் பணத்தை கொள்ளையடித்த ஒருவரை மீண்டும் அமைச்சராக நியமித்திருப்பதால் காங்கிரஸ் பட்டியலின மக்களுக்கு துரோகம் இளைத்திருக்கிறது. அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்தார். இதன் காரணமாக ஆளும் காங்கிரஸுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எம்எல்ஏ பதவியும் ராஜினாமா
இதனால் முதல்வர் டி.கே.சிவகுமார், பி.நாகேந்திராவை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த பி.நாகேந்திரா, “வால்மீகி ஆணைய ஊழல் வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அரசியல் ரீதியாக என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சியினர் செயல்படுகின்றனர்.
இந்த விவகாரத்தால் எனது கட்சிக்கும் ஆட்சிக்கும் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த வழக்கில் நான் நிரபராதி என நிரூபிப்பேன். அதுவரை எம்எல்ஏவாகவும் இருக்க விருப்பமில்லை. எனவே எனது எம்எல்ஏ பதவியும் ராஜினாமா செய்திருக்கிறேன்” என கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையடுத்து பாஜகவினர் பெங்களூரு, பெலகாவி ஆகிய இடங்களில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பி.நாகேந்திராவின் இந்த அறிவிப்பால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.