இந்தியா

‘டெல்லி பேரணியில் பெல்லட் துப்பாக்கி பயன்பாடு’ - காவல் நிலைய ஆவணத்தில் தகவல்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: ஜூலை 20 அன்று சிஜேபி நடத்திய நாடாளுமன்றம் நோக்கிய பேரணியின்போது, ​​டெல்லி காவல் துறையின் துணை ஆணையர் ரேங்க் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில், பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தின் பதிவேடு விவரங்கள் தெரிவிக்கிறது.

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த பேரணியில், நான்கு பேர் மீது பெல்லட் குண்டுகள் பாய்ந்தன. இதுகுறித்து நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாட்குறிப்புப் பதிவேட்டில், காவல்துறையின் துணை ஆணையர் ரேங்க் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில், விரைவு அதிரடிப் படை (RAF) பெல்லட் துப்பாக்கியிலிருந்து இரண்டு முறை சுட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ஏஎஃப்-ஆல் அதிகாலை 1.24 மணிக்கு பதிவு செய்யப்பட்ட அந்தப் பொது நாட்குறிப்புப் பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

பதிவேட்டின்படி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையிலான போராட்டத்தின்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த 5 கண்ணீர் புகைக் குண்டுகள், இரண்டு ஏஆர்ஜி துப்பாக்கிகள், இரண்டு பாலிஸ்டிக் தோட்டாக்கள் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்பகுதியில் பணியில் இருந்த காவல் துணை ஆணையரின் (DCP) உத்தரவின் பேரில், கன்னாட் பிளேஸ் என்ற ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆர்ஏஎஃப்-ன் துணை கமாண்டோ இரண்டு சுற்றுகள் பெல்லட் துப்பாக்கியால் சுட்டார் என்பது உள்விசாரணையில் தெரியவந்தது.

முன்னதாக, ஜூலை 20 பேரணியின்போது டெல்லியில் எந்தவிதமான பெல்லட் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்படவில்லை என்று காவல்துறை முன்னதாக மறுத்திருந்தது. போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தேவைக்கு அதிகமான பலத்தைப் பயன்படுத்தியதற்காக ஆர்ஏஎஃப் தலைவர் சீமா துண்டியா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைக் கண்டித்ததாகவும், எதிர்காலத்தில் இத்தகைய ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT