புதுடெல்லி: இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க கல்வி விசா 69 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளது.
கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவி வகித்தார். அப்போது அமெரிக்காவில் வசிக்கும், பணியாற்றும் வெளிநாட்டினர் மீது மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரியில் ட்ரம்ப் 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் மீது அவர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச்1 பி விசா கட்டணம் ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. அமெரிக்காவில் கல்வி பயில வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் எப்1 விசா கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் விசா நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2018-ல் 26,506 இந்திய மாணவர்களுக்கு எப்1 விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த 2019-ல் 26,247 விசாக்கள் விநியோகிக்கப்பட்டன. கரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் 114 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே எப்1 விசா வழங்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டில் 40,194 பேர், 2022-ம் ஆண்டில் 62,229 பேர், 2023-ம் ஆண்டில் 72,027 பேர், 2024-ம் ஆண்டில் 41,336 இந்திய மாணவர்கள் எப்1 விசாக்களை பெற்றனர். ஆனால் கடந்த 2025-ம் ஆண்டில் 12,776 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே எப்1 விசா வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டை ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க கல்வி விசா 69 சதவீதம் வரை குறைந்து உள்ளது.
தற்போது அமெரிக்காவுக்கு மாற்றாக பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கல்வி பயில இந்திய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.