ராம் பவன். இவரது மனைவி துர்காவதி.
பண்டா: உத்தர பிரதேச மாநிலத்தின் நீர்வளத் துறையில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றியவர் ராம் பவன். இவரது மனைவி துர்காவதி. இருவரும் பண்டா மற்றும் சித்ரகூடம் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் சிறிய அறையை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
அந்த 10 ஆண்டுகளில் சிறுவர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து வீடியோ கேம் விளையாட வைப்பது, அவர்களுக்கு சாக்லேட்டுகள் வழங்குவது, பரிசு வழங்குவது என பழக்கப்படுத்தி உள்ளனர்.
பின்னர் சிறுவர்களை ஆபாச படம் எடுத்துள்ளனர். இதுபோல் 33 சிறுவர்களை ராம்பவன் மற்றும் துர்காவதி இருவரும் ஆபாச படம் எடுத்து 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களுடைய சட்டவிரோத செயல்கள் வெளியில் தெரிய வந்தது.
போலீஸார் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் எடுத்ததும், அதில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பதும் சிலர் 3 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அப்போது ராம் பவன் வீட்டில் சோதனை நடத்திய போது கைப்பற்றப்பட்ட வீடியோக்கள், ஆதாரங்கள், ரொக்கப்பணம் போன்றவற்றை விசாரணை குழுவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கில் பண்டா மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை 163 பக்கத்தில் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு அரிதிலும் அரிதானது என்று மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் மிஸ்ரா தெரிவித்தார். ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதிக்கு போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட 33 சிறுவர்களுக்கும் உ.பி. அரசு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
அத்துடன் ராம்பவன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தையும் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சரி சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று நீதிபதி மிஸ்ரா உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது இந்த தம்பதி எப்படி செயல்பட்டனர் என்பதை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆதாரங்களுடன் விளக்கினர். மொபைல் போன், கைக் கடிகாரம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி சிறுவர்களை வளைத்துள்ளனர். பின்னர் அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் வரவழைத்துள்ளனர்.
டார்க் வெப் மூலம் ஆபாச வீடியோக்கள் விற்பனையாவது குறித்து இன்டர்போல் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளது. இதையடுத்து, ராம் பவன் மற்றும் துர்காதேவி சிக்கினர்” என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.