இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
கொழும்பு: ”டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மறுகட்டமைக்கு இந்தியா உதவும்” என்று பிரதமர் ஹரிணி அமரசூர்யாவை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
டிட்வா புயலால் இலங்கை பெரிதும் சேதம் அடைந்துள்ளது. ஏராளமான சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், ஏற்கெனவே இந்தியா மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.
தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் அரசு முறை பயணமாக இலங்கை வந்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூய்வாவை கொழும்புவில் நேற்று ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது, டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மறுகட்டமைப்புக்கு பிரதமர் மோடியின் உத்தரவின்படி உதவுவோம் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், ”இலங்கை பிரதமர் ஹரிணியை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இலங்கையில் மறுகட்டமைப்புக்கான திட்டத்தை இந்தியா வழங்கி உள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையில் உள்ள ஆழ்ந்த நட்புறவை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெராத்தும் உடன் இருந்தார். பின்னர் இருவரும் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சியில் பெரும் சேதம் ஏற்பட்டிருந்த பகுதியில் 120 அடி நீள பெய்லி பாலத்தை திறந்து வைத்தனர்.
இந்தப் பாலம் இந்தியா சார்பில் கட்டித்தரப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை அதிபர் அனுரா குமாரா திசநாயகேவையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து, பிரதமர் மோடியின் வாழ்த்துகளை தெரிவித்தார். இலங்கையில் இந்தியா சார்பில் 450 மில்லியன் டாலர் மதிப்புள்ள மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அவற்றில் சாலைகள், ரயில் பாதைகள், பாலங்கள், வீடுகள் போன்ற மறுகட்டமைப்புகள் செய்யப்பட உள்ளன.