திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிட்ரபேட்டா பகுதியைச் சேர்ந்த நாராயணா-சுனிதா தம்பதி, தங்கள் மகளின் திருமணத்தை திருமலையில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, மணமகள் மற்றும் மணமகன் வீட்டைச் சேர்ந்த முக்கியமானவர்கள் ரயிலில் திருப்பதிக்கு வந்தனர்.
பின்னர், அங்கிருந்து 2 ஜீப்களில் திருமலைக்குச் சென்றனர். திருப்பதி அலிபிரி வாகன சோதனைச் சாவடியில் இரு வாகனங்களும், அதில் உள்ளவர்களும் அவர்களின் உடமைகளும் சோதிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது, மணமகளுக்கு போடவிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 61 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.2,02,840 ரொக்கம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்துப்பத்திரம் ஆகியவை வைத்திருந்த பை காணாமல் போனது. இதனை அறியாமலேயே அவர்கள் திருமலைக்கு சென்றுள்ளனர்.
சிறிது நேரத்திலேயே, திருமலைக்கு பைக்கில் ஹெல்மெட் அணிந்து சென்ற ஒருவர், அலிபிரி சோதனைச் சாவடியில் இருந்த திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர் ரெட்டப்ப ராவ் என்பவரிடம், “இந்த பை, சாலையில் கிடந்தது. இதனை உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள்” எனக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டார். பாதுகாவலர் ரெட்டப்ப ராவ், அந்தப் பையை, தனது மேலதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இதனிடையே, திருமலை சென்றடைந்த திருமண கோஷ்டியினர், நகை, பணம், சொத்து பத்திரம் இருந்த பை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, திருமணமே நின்று போகும் அளவிற்கு பிரச்சினை ஏற்பட்டது.
பின்னர், திருமலையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் புகார் அளித்தனர். அதை அறிந்த அலிபிரி சோதனைச் சாவடி அதிகாரிகள் அந்தப் பை தங்களிடம் இருப்பதை போலீஸாருக்கு தெரியப்படுத்தினர். பின்னர், திருமண கோஷ்டியினர் அலிபிரி சோதனைச் சாவடிக்குச் சென்று அந்தப் பையை வாங்கினர். இதனால் நின்று போக இருந்த திருமணம் மீண்டும் நல்லபடியாக நடந்தது.