புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பு கசிந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நீட் மறுதேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) 21-ம் தேதி நடத்துகிறது. இதற்கான வினாத்தாள் ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய இடங்களில் இருந்து நாடு முழுவதும் 551 நகரங்களுக்கு வான் வழியாகவும், தரைவழியாகவும் கொண்டு செல்லப்படுகிறது.
அதேபோல் தேர்வு முடிந்தவுடன் ஓஎம்ஆர் விடைத்தாள்களும் பாதுகாப்புடன் கொண்டு வரப்படவுள்ளன. இந்நிலையில், என்டிஏ பரிந்துரையை ஏற்று இரட்டை அடுக்கு பாதுகாப்பு தேவை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது.
விமான நிலையங்கள், ஹெலிபேடுகள் மற்றும் இதர இடங்களில் இரட்டை அடுக்கு பாதுகாப்பை வழங்கும்படி மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎப்), மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) ஆகியவை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
இவர்கள் நீட் மறு தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத் தாள்களை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் கொண்டு செல்வர்.
இப்பணியில் என்டிஏ மற்றும் தபால்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட சிறப்பு அதிகாரிகளை நியமிக்கும்படி சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் தலைமையகங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.