கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
பெங்களூரு: கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குத் தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
இந்திய கூட்டாட்சியில் ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிட உரிமை இல்லை. இந்த அடிப்படை விதியைக் கூட தெரிந்துக் கொள்ளாமல் பேசக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என எங்களுக்குத் தெரியும். அவர்களது (தமிழக தலைவர்கள்) வேலையை அவர்கள் பார்க்கட்டும். எங்களது வேலையை நாங்கள் பார்க்கிறோம்.
எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் அவர்கள் தலையிடக் கூடாது. அவர்கள் கூறிவரும் கருத்துக்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. இவ்வாறு முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.
கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், ‘‘தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்ட கரூர் பொதுக் கூட்டத்தில் நிறைய பேர் இறந்தனர். அதுபற்றி நாங்கள் பேசவில்லை. இங்கு நடந்ததைப் பற்றி அவர் ஏன் பேசுகிறார்?
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டது தமிழர்களாக இருந்தாலும் எங்களது மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எந்த மொழி, சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கன்னடர்கள். இந்தச் சம்பவம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்திருக்கிறோம். அதில் வனத்துறை அதிகாரிகள் தவறு செய்தது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’’ என்று தெரிவித்தார்.