விஜய், ராகுல் காந்தி
புதுடெல்லி: “‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்.” என்று காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ திரைப்பட சர்ச்சை தொடர்பாக காங்கிரஸார் குரல் கொடுத்து வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் எனப் பலரும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஆதரவாக பேசிவிட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது ‘ஜனநாயகன்’ படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடுக்க நினைப்பது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரலை அடக்கி, நீங்கள் எப்போதும் வெல்ல முடியாது மோடி அவர்களே!” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தவெக தலைவர் விஜய்யிடம் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடித்து அவர் இன்று சென்னை புறப்பட்டுவிட்டதாகத் தகவல்.
இந்தச் சூழலில், விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தியின் குரல் பதிவாகியுள்ளது. கரூர் துயரச் சம்பவம் நடந்தபோதும் கூட விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசினார் என்பது நினைவுகூரத்தக்கது. ஆனால் அந்தப் பேச்சு தொடர்பான விவரங்கள் ஏதும் கசியவில்லை. இந்தநிலையில் இன்று இந்தப் பதிவை ராகுல் பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அதுமட்டுமல்லாது தவெகவுடன் காங்கிரஸ் காட்டும் நெருக்கத்தால் தமிழ்நாட்டில் திமுகவினர் அதிருப்தியில் இருக்கும் சூழலில், ராகுல் காந்தி ‘ஜனநாயகன்’ சர்ச்சையில் பதிவிட்டிருக்கும் ட்வீட் அரசியல் ரீதியாக கவனம் பெறுகிறது.