கொல்கத்தா: மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவின் லேக்டவுன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த, உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் லயோனல் மெஸ்ஸியின் 70 அடி உயர பிரம்மாண்ட சிலை நேற்று அகற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாக வீசிய பலத்த காற்றின்போது, இரும்பு மற்றும் ஃபைபர் கிளாஸ் கொண்டு செய்யப்பட்ட இந்த மாபெரும் சிலை பலமாக ஆடியுள்ளது. இதனால், வரவிருக்கும் பருவமழைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார்களை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை விஐபி சாலை பகுதியில் உள்ள சுரங்கப்பாதை பாதசாரி நடைபாதை மேலே அமைக்கப்பட்டிருந்த இந்த பிரம்மாண்ட சிலையை, ஹைட்ராலிக் கிரேன்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவின் உதவியுடன் பாதுகாப்பாகப் பிரித்து அகற்றினர்.
அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி, 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை ஏந்தி நிற்பது போல இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. கடந்த 2025 டிசம்பரில் மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின்போது இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்பயணத்தின் போது மைதானத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிலை அகற்றப்பட்டதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மெஸ்ஸி சிலைக்கு, முன்னாள் டிஎம்சி அமைச்சர் சுஜித் போஸ் பெரும் ஆதரவாளராக இருந்தார்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், முந்தைய டிஎம்சி ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட பல்வேறு பொது உள்கட்டமைப்புகள், விளையாட்டுச் சிற்பங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 23 அன்றும் கொல்கத்தாவில் இருந்த மற்றொரு கால்பந்து தொடர்பான சிற்பத்தை மாநில அரசு அகற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.