புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று (டிச.3) டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களிலும் ஏற்பட்ட கணினி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, செக்-இன் அமைப்புகள் பாதிக்கப்பட்டு பல்வேறு விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதுபற்றி வாரணாசி விமான நிலைய பயணிகளுக்கு வெளியிடப்பட்ட ஓர் அறிவிப்பில், ‘மைக்ரோசாப்ட் விண்டோஸில் உலகளவில் பெரிய அளவிலான சேவை செயலிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சேவைகள்/செக்-இன் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து மைக்ரோசாப்ட் மற்றும் விமான நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை.
ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஏராளமான பயணிகள், தாமதங்கள் குறித்து விமான நிறுவன உதவி மையத்தை நாடி தங்கள் விமானங்கள் பற்றிய தகவல்களைத் தேடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலும் சில விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நான்கு விமானங்கள் தாமதமாக வந்தன. மேலும், பல இண்டிகோ விமான சேவைகள் செயல்பாட்டு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டன. 22 வருகைகள் மற்றும் 20 புறப்பாடுகள் உட்பட மொத்தம் 42 ரத்துகளை இண்டிகோ விமான நிறுவனம் பதிவு செய்தது.
இன்று காலை டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில உள்நாட்டு விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தாமதங்கள், நேர மாற்றம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ கணிணி சேவை பாதிப்பு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து விமான நிலையங்களிலும் செக்-இன் வழக்கம் போல் செயல்படுகிறது. எங்கள் அனைத்து விமானங்களும் அட்டவணைப்படி இயங்குகின்றன. எங்கள் பயணிகளின் புரிதலுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளது.
இண்டிகோ வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களில் பல தவிர்க்க முடியாத விமான தாமதங்கள் மற்றும் சில ரத்துகள் ஏற்பட்டன. செயல்பாடுகள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதிசெய்ய எங்கள் குழுக்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மாற்று விமான விருப்பங்கள் அல்லது பணத்தைத் திரும்பச் செலுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பில் (AMSS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 800-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தாமதமானது நினைவுகூரத்தக்கது.