முப்படை தலைமை தளபதி ராஜா சுப்பிரமணி
புதுடெல்லி: முப்படை தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து நாட்டின் 3-வது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றார்.
இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். பல பிரிவுகளில் தலைமை அதிகாரியாக பணியாற்றியவர். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெற்றார்.
பாகிஸ்தான் மற்றும் சீனா நிலவரங்களை இவர் நன்கு அறிந்தவர் என்பதால், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைமை செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
புதிய கடற்படை தளபதி:
இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதையடுத்து, நாட்டின் 27-வது கடற்படை தளபதியாக அட்மிரல் கிருஷ்ண சுவாமி நாதன் நேற்று பொறுப்பேற்றார்.
புதிய கடற்படை தளபதி கிருஷ்ண சுவாமி நாதன்
இவர் கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு சேர்ந்தார். கடற்படையில் சிறந்த பணிக்காக பரம் விசிஷ்ட் சேவா, அதி விசிஷ்ட் சேவா மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கங்களை இவர் வென்றுள்ளார்.