புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர் ஆர்வலர் நிஷு ஆசாத்தின் தந்தையை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சுதந்திரா பரத்வாஜை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின் போது நிஷு ஆசாத்தின் தந்தை சஞ்சய் தாக்கப்பட்டார். இதற்கு காரணமான இன்புளூயன்சர் சுதந்திரா பரத்வாஜ் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்ற வீதி காவல் நிலையம் முன்பு சி.ஜே.பி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுதந்திரா பரத்வாஜ் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் பரத்வாஜ் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினரிடம் பரத்வாஜ் தப்ப முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பரத்வாஜை போலீஸார் கைது செய்து விசாரித்து வருவதாக தெரியவந்துள்ளது.