கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக மூத்த தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, நந்திகிராம், பவானிபூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நந்திகிராம் தொகுதிக்கான வேட்புமனுவை கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் ஹல்டியாவில் நேற்று தாக்கல் செய்தார்.
அம்மாவட்டத்தை சேர்ந்த மேலும் இரு பாஜக வேட்பாளர்கள் அதிகாரியுடன் இணைந்து தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநில பாஜக முன்னாள் தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
ஊழலற்ற ஆட்சி: பின்னர் சுவேந்து அதிகாரி பேசுகையில், “இந்த முறை வாக்காளர்களிடையே பாஜகவுக்கான ஆதரவும் தேவையும் மிக அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு தூய்மையான, ஊழலற்ற, வளர்ச்சி சார்ந்த மற்றும் நெறியான அரசை அமைப்பதில் பாஜக உறுதியுடன் உள்ளது. நந்திகிராம், பவானிப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் நான் வெற்றி பெறுவேன்” என்றார்.
முதல்வர் மம்தா பானர்ஜி, நீண்டகாலமாக தக்கவைத்து வரும் பவானிப்பூரில் அவருக்கு எதிராக சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராமில் முதல்வர் மம்தாவை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்தார். இதனால் மக்களால் மிகவும் கவனிக்கப்படும் தொகுதியாக பவானிப்பூர் மாறியுள்ளது.