புதுடெல்லி: குருத்வாராவுக்குள் நுழைய மறுத்த ராணுவ அதிகாரியை பணிநீக்கம் செய்யும் ராணுவத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ராணுவத்தில் மத அணிவகுப்பு என்ற நடைமுறை உள்ளது. இதில் அனைத்து வீரர்களும் 'சர்வ தர்ம ஸ்தல்' என்ற அனைத்து மத வழிபாட்டுத் தலத்திற்கு ஒவ்வொரு வாரமும் சென்று பிரார்த்தனை செய்கின்றனர். இந்நிலையில் பஞ்சாபில் சீக்கிய வீரர்களை கொண்ட ஒரு படைப் பிரிவுக்கு கிறிஸ்தவரான சாமுவேல் கமலேசன் என்பவர் அதிகாரியாக இருந்தார். இவரது படைப்பிரிவில் அனைத்து மத வழிபாட்டுத் தலம் இல்லை. ஒரு குருத்வாரா, கோயில் இருந்தது.
இதனால் கமலேசன் தனது படை வீரர்களுடன் மத அணிவகுப்புக்கு செல்லும்போது குருத்வாரா உள்ளே செல்வதில்லை. வெளியில் நின்று மட்டும் மரியாதை செலுத்துவார்.
இவர், குருத்வாரா உள்ளே செல்லாதது, அதன் சடங்குகளில் பங்கேற்காதது அவரது படைப்பிரிவின் ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை பாதிக்கும் என்று அவரது அதிகாரிகள் கூறியபோதும் கமலேசன் அதை ஏற்கவில்லை. அது தனது மத நம்பிக்கைக்கு எதிரானது என வாதிட்டு வந்தார். கமலேசன் தொடர்ந்து ஆலோசனைகள், எச்சரிக்கைகளை புறக்கணித்ததால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிரான அவரது மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் கமலேசன் மேல்முறையீடு செய்தார். அவரது மனு புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி, “சாமுவேல் சிறந்த அதிகாரியாக இருக்கலாம். ஆனால் ராணுவத்துக்கு பொருத்தமற்றவர். ராணுவத்துக்கு அதிக பொறுப்புகள் இருக்கும் இத்தருணத்தில் இதை நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை. இது ஒரு ராணுவ அதிகாரியின் முற்றிலும் ஒழுங்கீனமான செயல். இதுபோன்று சண்டையிடும் நபர்கள் ராணுவத்தில் இருக்க தகுதியானவர்களா?” என்று கூறி ராணுவத்தின் முடிவை உறுதி செய்தார்.