புதுடெல்லி: நாடு முழுவதுமான டிஜிட்டல் கைது முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் கைது முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவுசெய்த வழக்கை, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்றைய விசாரணைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
டிஜிட்டல் கைது முறைகேடு வழக்குகளை முதலில் சிபிஐ விசாரிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் தொடர்புடைய வழக்குகளை படிப்படியாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். டிஜிட்டல் கைது முறைகேடுக்கு துணைபோகும் வகையில் வங்கிக் கணக்கு தொடங்க உதவிய வங்கி அதிகாரிகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். போலியான வங்கிக் கணக்குகளை கண்டறிய ஏஐ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில் இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியை இணைக்கிறோம்.
இந்த விசாரணைக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பஞ்சாப், தமிழ்நாடு, உத்தராகண்ட், ஹரியாணா போன்ற மாநிலங்கள் சிபிஐ விசாரணைக்கு இசைவளிக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களில் சைபர் குற்றப் பிரிவு முழுமையாக இயங்குவதில் உள்ள சிக்கல்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணைக்குள் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் ஆஜராக வேண்டும்.
டிஜிட்டல் கைது முறைகேடுகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்காவிட்டால் டிஜிட்டல் கைது முறைகேடுகள் பூதாகரமாகும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.