புதுடெல்லி: “அறவழியில் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்துக்காகவே தடியடி நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அமைதியான போராட்டங்கள் மீது இது மாதிரியான நடவடிக்கை கூடாது.” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய சூழலில் அதற்கு உச்ச நீதிமன்றம் இவ்வாறாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளை கண்டித்து தேசம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை அதிகளவில் தங்களது படைகளை பயன்படுத்தியத குற்றச்சாட்டு குறித்த பல்வேறு மனுக்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது: அறவழியில் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை அரசியலமைப்பின் கீழ் அனுமதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் போராட்டம் நடைபெறுகிறது என்ற காரணத்துக்காகவே தடியடி நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அமைதியான போராட்டங்கள் மீது இது மாதிரியான நடவடிக்கை கூடாது.
வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறினால் அது சார்ந்து நடவடிக்கை, விசாரணை மேற்கொள்ளலாம். ஜனநாயக செயல்பாட்டில் ஒழுக்கம் என்பது முக்கியமான அங்கம் என்றார்.
தொடர்ந்து இந்த மனுக்கள் தொடர்பான விசாணை நாளை நடைபெறும் என நீதிமன்றம் தெரிவித்தது.
போராட்டத்தில் போலீஸ் தடியடி
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த முறைகேடுகளுக்கு தார்மிகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் மாதம் போராட்டத்தை தொடங்கியது.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி சிஜேபி கட்சி சார்பில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களை கலைக்க டெல்லி போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு - சிஜேபி இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.