புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ குறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன’ உள்ளது. தேசிய பாடலாக ‘வந்தே மாதரம்’ இருக்கிறது. இந்நிலையில், ‘வந்தே மாதரம்’ பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த சுற்றறிக்கைக்கு எதிராக முகம்மது சயீத் நூரி என்பவர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பக்ஷி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, ‘‘நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், மக்களின் மதம் மற்றும் நம்பிக்கையைக் கணக்கில் கொள்ளாமல் அப்பாடலை பாடும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், அது விசுவாசத்தை வெளிப்படுத்தும் ஒரு சமூக சடங்கில் பங்கேற்பதற்கான கட்டாயமாக சிலர் உணரக்கூடும்’’ என வாதிட்டார்.
அப்போது நீதிபதி ஜாய்மல்யா பக்ஷி, ‘‘தேசியப் பாடலை பாடாதவர்களுக்கு தண்டனை உண்டு என்றோ அல்லது ஏதேனும் விளைவுகள் ஏற்படும் என்றோ அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா? தேசியப் பாடலை பாடாததற்காக யாரேனும் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது சஞ்சய் ஹெக்டே, குறுக்கீடு ஏதேனும் ஏற்பட்டால் மட்டுமே தண்டனை உண்டு என பதிலளித்தார். மேலும் அவர், ‘‘தேசிய பாடலை பாட வேண்டும் என சட்ட ரீதியான வலியுறுத்தல் இல்லாவிட்டாலும், பாட மறுப்பவர் மீது எப்போதும் ஒரு சமூக அழுத்தம் இருக்கும். பாடுவதற்கான அறிவுறுத்தல் என்ற போர்வையில் அனைவரையும் கட்டாயப்படுத்த முடியுமா’’ என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “தேசியப் பாடலைப் பாடும்படி கட்டாயப்படுத்தும் வகையில் மனுதாரருக்கு அறிக்கை ஏதும் அனுப்பப்பட்டுள்ளதா?” என்று வழக்கறிஞர் ஹெக்டேவிடம் கேட்டார்.
அப்போது நீதிபதி ஜாய்மல்யா பக்ஷி, ‘‘மத்திய அரசின் வழிகாட்டுதலில் உள்ள 5-வது பிரிவு பாடலாம் (may) என்றே குறிப்பிடுகிறது. தேசியப் பாடலை பாடுவதற்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளதோ அதே அளவு சுதந்திரம் பாடாமல் இருப்பதற்கும் உள்ளது. அதனால்தான், இது சட்ட உரிமைகளுக்கு முரணாக அமையவில்லை’’ என குறிப்பிட்டார்.
உங்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ அல்லது அறிவிக்கை அனுப்பப்பட்டாலோ நீதிமன்றத்தை அணுகலாம் என்று மனுதாரரிடம் தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த மனு பாகுபாடு குறித்த ஒரு தெளிவற்ற அச்சத்தைத் தவிர வேறில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.