புதுடெல்லி: விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரியும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடுமாறு தயாரிப்பு நிறுவனத்திடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தவெக தலைவரான நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் பஇந்த டத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதற்கான தொடக்ககட்ட பணிகள் நடந்துவந்தன. டிக்கெட் முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.
அந்த சூழலில் இப்படத்துக்கு தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்தார்.
அதையடுத்து தணிக்கை வாரியத்தின் சார்பில் தனி நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் இந்த மேல்முறையீட்டு வழக்கை ஜன. 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து, பதில் மனு தாக்கல் செய்யுமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று (ஜன.15) விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என்ன? - ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர் தரப்பு மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்தது.
ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை சான்று விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் ‘அவசரம் காட்டுவதாக’ விமர்சித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பே இது தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் வரை படத்தின் தணிக்கை சான்றிதழை நிறுத்தி வைக்குமாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.