திருவனந்தபுரம்: ஒன்றரை வயது ஆண் குழந்தையை, வளர்ப்பு தந்தை அடித்து கொலை செய்து உள்ளார். அந்த குழந்தையின் உடலில் 51 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. இது தொடர்பாக குழந்தையின் தாயும், வளர்ப்பு தந்தையும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு அருகேயுள்ள பனவூரைச் சேர்ந்தவர் அகிலா (24). இவரது கணவர் அகில் இரு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த அகிலா ஒன்றரை வயது ஆண் குழந்தை அர்ஷித்துடன் தனியாக வசித்து வந்தார். இதன் பிறகு அஸ்கர் (31) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
அஸ்கர், அகிலாவின் தனிமைக்கு குழந்தை அர்ஷத் இடையூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக வளர்ப்பு தந்தை அஸ்கர், குழந்தையை அடிக்கடி அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். குழந்தையின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்திருக்கிறார். பலமுறை தாய் அகிலா முன்பாகவே குழந்தையை, அஸ்கர் அடித்து உதைத்திருக்கிறார். இந்த கொடூரத்தை அகிலா கண்டிக்கவில்லை.
கடந்த 29-ம் தேதி வளர்ப்பு தந்தை அஸ்கர், குழந்தை அர்ஷித்தை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தார். குழந்தை சாப்பிடும்போது புரையேறி மயங்கிவிட்டதாக மருத்துவரிடம் அவர் தெரிவித்தார். உள்ளூர் மருத்துவரின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஏடி மருத்துவமனைக்கு குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த எஸ்ஏடி மருத்துவர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பிறப்பு உறுப்பு உட்பட 51 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. கை, கால்களில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கிறது. உடலில் சிகரெட் சூடு காயங்களும் இருந்தன.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சந்தேகம் வலுத்ததால் வளர்ப்பு தந்தை அஸ்கர், தாய் அகிலாவிடம் நெடுமங்காடு போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை அடித்துக் கொலை செய்ததை அஸ்கர் ஒப்புக் கொண்டார். அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வளர்ப்பு தந்தையின் கொடூரங்கள் தெரிந்திருந்தும் குழந்தையை காப்பாற்றாத தாய் அகிலாவையும் போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, ‘‘அஸ்கருக்கு ஏற்கெனவே அமீனா என்பவருடன் திருமணமாகி உள்ளது. அஸ்கரின் கொடூர தாக்குதல்களால் அமீனா தற்போது கோமா நிலையில் உள்ளார். இதனிடையே, ஒரு ஆசிரியை உடன் அஸ்கர் தொடர்பில் இருந்துள்ளார். அந்த ஆசிரியை மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார்.இதில் அஸ்கருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கிறோம்’’ என்றனர்.