புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுவிஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட முயன்ற போது, அதன் இன்ஜின் தீப்பிடித்ததில் 6 பயணிகள் காயமடைந்தனர்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுவிஸ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330 ரக விமானம், நேற்று அதிகாலை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு புறப்படத் தயாரானது. ஓடுதளத்தில் வேகமாகச் செல்லத் தொடங்கிய போது, அந்த விமானத்தின் ஒரு இன்ஜின் செயலிழந்து தீப்பிடித்தது.
இதுகுறித்து சுவிஸ் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் இருந்து சூரிச் நகருக்கு புறப்படத் தயாரான விமானத்தில் 228 பயணிகள் மற்றும் 4 குழந்தைகள் இருந்தனர். இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்கு மேல், விமானம் கிளம்ப முயன்ற போது இன்ஜினில் சிக்கல் ஏற்பட்டது. இதை அறிந்த விமான ஊழியர்கள் உடனடியாக விமானத்தை நிறுத்தினர்.
பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் அவசர கால சறுக்குப் பாதைகள் மூலம் ஓடுதளத்திலேயே வெளியேற்பட்டனர். இதில் காயமடைந்த 6 பயணிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.