புதுடெல்லி: இந்தியாவில் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோ சேட், ஸ்னாப்சேட், சேர் சாட் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த சமூக வலைதள செயலிகளை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்யும் போது சிம் கார்டு அவசியம்.
இதன்பிறகு சிம் கார்டை அகற்றினாலோ அல்லது சிம் கார்டு செயலிழந்துவிட்டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். சமூக வலைதள செயலிகளை பயன்படுத்த இணைய வசதி மட்டும் போதும்.
இதை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் மொபைல்போனில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியும். சிம் கார்டு இல்லையென்றால் சமூகவலைதள செயலிகள் தானாகவே செயலிழந்து விடும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய விதிகளை அறிவித்துள்ளது.
கணினி மற்றும் மடிக்கணினியில் சமூக வலைதளங்களை ஒருமுறை லாகின் செய்துவிட்டால் அந்த சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும். புதிய விதிகளின்படி 6 மணி நேரத்துக்கு ஒருமுறை சமூகவலைதளங்கள் தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். மீண்டும் வழக்கம் போல் லாக் இன் செய்ய வேண்டும்.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘சைபர் மோசடி கும்பல்கள் சிம் கார்டை பயன்படுத்தாமல் இணையத்தை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ் அப் காலில் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றன. இதனால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன.
தற்போதைய சூழலில் வங்கிச் சேவை சார்ந்த செயலிகளை பயன்படுத்த சிம் கார்டுகள் கட்டாயமாக உள்ளது. அதே நடைமுறையை சமூக வலைதளங்களுக்கும் அமல்படுத்த உள்ளோம். மத்திய அரசின் புதிய விதிகளை 90 நாட்களுக்குள் அமல்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டு உள்ளது’’ என்றனர்.