இந்தியா

“மகன் யதீந்திராவுக்கு முக்கிய இலாகாக்கள்” - ராகுலிடம் சித்தராமையா நேரில் வலியுறுத்தல்

மோகன் கணபதி

புதுடெல்லி: கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா இன்று (மே.29) டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது, டி.கே.சிவக்குமார் அமைச்சரவையில் தனது மகன் யதீந்திராவுக்கு முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தனது கோரிக்கைகளை ராகுல் காந்தியிடம் அவர் வழங்கினார்.

கர்நாடக முதல்வராக மூன்று ஆண்டுகளாக பதவி வகித்த சித்தராமையா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்த கையோடு டெல்லி சென்ற சித்தராமையா, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, தற்போது சட்ட மேலவை உறுப்பினராக உள்ள தனது மகன் யதீந்திரா, டி.கே. சிவக்குமார் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்படும்போது அவருக்கு மருத்துவக் கல்வி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அல்லது சிவக்குமார் வகித்து வந்த தொழில்துறை அல்லது நீர்வளத்துறை போன்ற துறைகளை ஒதுக்குமாறு வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களின் நியமனங்கள் தொடர்பான தனது விருப்பப் பட்டியலையும் சித்தராமையா ராகுல் காந்தியிடம் வழங்கி உள்ளார். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சித்தராமையா சந்தித்தார். இந்த சந்திப்புகளின்போது, எம்எல்ஏக்கள் கே.ஜே. ஜார்ஜ், பிரியங்க் கார்கே, யதீந்திரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT