ராகுல் மம்கூடத்தில்
திருவனந்தபுரம்: வெளிநாடு வாழ் இந்தியப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூடத்திலுக்கு திருவல்லாவில் உள்ள முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று (ஜன.17) ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
ராகுல் மம்கூடத்திலின் ஜாமீன் மனு மீதான விரிவான விசாரணைக்குப் பிறகு, நீதிபதி அருந்ததி திலீப் அந்த மனுவை தள்ளுபடி செய்தார். ராகுல் தனது ஜாமீன் மனுவில், அந்தப் பெண்ணுடனான தனது உறவு பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என்றும், தனது கைது நடவடிக்கையின்போது முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரகசியத் தன்மையைப் பேணுவதற்காக, உதவி அரசு வழக்கறிஞரின் கோரிக்கையின் பேரில், நீதிமன்ற நடவடிக்கைகள் மூடிய அறைக்குள் நடத்தப்பட்டன. ஜனவரி 11 அன்று பாலக்காட்டில் கைது செய்யப்பட்ட மம்கூடத்தில், இனி ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தை அணுகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மனு திங்கட்கிழமை தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பின்னணி என்ன? - கேரள மாநிலம் பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் ராகுல் மம்கூடத்தில். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாலியல் புகார் வழக்கில் ராகுல் தலைமறைவானார்.
இதையடுத்து, எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிதி ரீதியாக சுரண்டுவதாகவும் ஒரு பெண் இ-மெயில் மூலம் கேரள முதல்வருக்கு புகார் அனுப்பினார். இது ராகுல் மீதான 3-வது பாலியல் புகார் ஆகும். இது குறித்து விசாரணை நடத்துமாறு, மாநில போலீஸ் டிஜிபிக்கு அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் ராகுல் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அதிகாரி பூங்குழலி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் பாலக்காட்டில் ஜனவரி 11ஆம் தேதி அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.