பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக சித்தராமையா முடிவு செய்துவிட்டதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று (மே 26) ஆலோசனை நடத்தியது. காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ரந்தீப் சுர்ஜேவாலா, காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சித்தராமையாவிடம் கோரப்பட்டதாகத் தகவல் வெளியானது. முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்த பிறகு, அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார் என்றும், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக உள்ள அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் சமரச திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்குமாறு சித்தராமையா கேட்டபோது, அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்பதை கார்கே சுட்டிக்காட்டியதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய சித்தராமையாவை அவரது அதிகாரப்பூர்வ இல்லமான காவிரியில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று அவருக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சித்தராமையாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே, “பதவி விலக வேண்டாம் என்று நாங்கள் அவரிடம் கூறினோம். ஆனால், தான் ஏற்கெனவே வாக்குறுதி அளித்துவிட்டதாக அவர் தெரிவித்தார். அவரைச் சந்தித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், கட்சித் தலைமை ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதால் தன்னால் பதவியில் நீடிக்க இயலாது என அவர் கூறினார். முதல்வர் பதவியில் இருந்து விலக அவர் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார். நாளை அவர் பதவி விலகக்கூடும்” என தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஹெச்.கே. பாட்டீல், ஹெச்.சி. மகாதேவப்பா, ஜமீர் அகமது கான், ஈஸ்வர் கந்த்ரே, சந்தோஷ் லாட், சட்டமன்ற உறுப்பினர்கள் நஞ்சேகவுடா, நாகேந்திரா, உமேஷ் மேட்டி, பொன்னண்ணா, ஜி.டி. தேவேகவுடா, மேலவை உறுப்பினர்கள் சலீம் அகமது, ராஜேந்திர ராஜண்ணா உள்ளிட்டோர் முதல்வர் சித்தராமையாவை இன்று சந்தித்தனர்.
இதனிடையே, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நாளை சந்திக்க முதல்வர் சித்தராமையா நேரம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, காலை உணவருந்த தனது இல்லத்துக்கு வருமாறு துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.