புது டெல்லி: டெல்லியில் நடைபெற்ற 'ரெய்சினா கலந்துரையாடல் 2026' நிகழ்வில் கடற்படை தலைமைத்தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி பேசியதாவது: ஒவ்வொரு நாடும் தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்யத் தயாராக இருக்க வேண்டும். இதற்குச் சொந்தமாக பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆலைகளை உருவாக்குவது மிக முக்கியம்.
ராணுவத் தளவாடங்களை பெருமளவில் உற்பத்தி செய்வதுடன், உற்பத்தி செய்யும்போதே அவற்றை நவீனப்படுத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும். போர்கள் குறுகிய காலத்தில் முடிந்துவிடும் என்ற எண்ணம் மாறி வருகிறது.
பல்வேறு காரணங்களால் பல நாடுகள் தற்சார்பு நிலையை நோக்கித் தள்ளப்படுகின்றன. இந்தியா தற்சார்பு கொள்கையில் உறுதியாக உள்ளது.
அதே சமயம், ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து பாதுகாப்புத் துறையில் கூட்டுத் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிலும் நாம் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு தலைமைத் தளபதி திரிபாதி பேசினார்.