புதுடெல்லி: புகழ்பெற்ற இந்திய சிற்பியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான ராம் வி. சுதார் (100) காலமானார்.
குஜராத்தின் கெவாடியாவில் மிக உயரமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை வடிவமைத்தவர்தான் ராம் சுதார். வயது முதிர்வு காரணமாக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது மகனின் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதார் தனது திறமையால் மிகச்சிறந்த சிற்பக் கலைஞராக உருவெடுத்தார்.
சிற்பக் கலைக்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, மத்திய அரசு, 1999-ல் பத்ம விருதையும், 2016-ல் பத்ம பூஷண் விருதையும் வழங்கி கவுரவித்தது.அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.