இந்தியா

இரண்டு நாள் பயணமாக டிச.4-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக டிச.4-ம் தேதி இந்தியா வருகிறார்.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 23-வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அரசு முறைப் பயணமாக டிச. 4ல் இந்தியா வருகிறார். டிச.5-ம் தேதி வரை அவரது பயணம் இருக்கும்.

இந்த பயணத்தின்போது, அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். ரஷ்ய அதிபர் புதினை வரவேற்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தளிக்கிறார்.

இந்த அரசுமுறைப் பயணம், இருதரப்பு உறவுகளில் நிலவும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், சிறப்பான, சலுகையுடன் கூடிய இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்திய மற்றும் ரஷ்ய தலைமைக்கு வாய்ப்பாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், விளாடிமிர் புதினின் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவும் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த மோதல் விரைவாக முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்திருந்த பிரதமர் மோடி, இது போருக்கான நேரம் அல்ல என கூறி இருந்தார். ரஷ்ய அதிபர் புதினை மாஸ்கோவில் சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் தலைநகர் கீவ் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து சமரச முயற்சிகளை மேற்கொண்டார். இவ்விஷயத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய உலகத் தலைவராக மோடி கருதப்படுகிறார். எனவே, இந்தியா வரும் புதினுடன் உக்ரைன் விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, விளாடிமிர் புதினின் இந்திய வருகை குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்​பரில் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கின்​றன. ராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு போன்ற உயர்​தொழில்​நுட்ப துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வதற்​கான திட்​டங்​கள் இந்த சந்​திப்​பின்​போது முன்​னெடுக்​கப்​படும்.

இந்​தியா தனது வர்த்தக உறவு​கள் குறித்த முடிவு​களை சுய​மாக மேற்​கொண்டு வரு​கிறது. ரஷ்​யா​வுட​னான வர்த்தக உறவு​களில் இந்​தியா முற்​றி​லும் திறமை​யான வகை​யில் முடிவு​களை எடுத்து வரு​கிறது.

இந்​தி​யா​வுக்​கும், ரஷ்​யா​வுக்​கும் இடையி​லான பொருளா​தார கூட்டாண்மை அமெரிக்​கா​வால் அச்​சுறுத்​தலுக்கு ஆளாக​வில்​லை. ஏனெனில், இந்​தியா எந்த அழுத்​தத்​துக்​கும் அடிபணி​யாமல் தனது சொந்த விருப்​பப்​படி சர்​வ​தேச கூட்​டாளர்​களை தேர்ந்தெடுக்கிறது.

ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் நிரந்தர இடம் பெறு​வதற்​கான பிரேசில், இந்​தி​யா​வின் முயற்​சியை ரஷ்யா ஆதரிக்​கிறது. தற்போது மாறிவரும் உலகளா​விய நில​வரங்​களுக்கு ஏற்ப ஐநா பாது​காப்பு கவுன்​சில் சீர்​திருத்​தம் செய்​யப்பட வேண்​டும் என்​பதே ரஷ்​யா​வின் நிலைப்​பாடு.” என தெரிவித்திருந்தார்.

கடந்த 2021-ம் ஆண்டு டிச. 6ம் தேதி இந்தியா - ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த விளாடிமிர் புதின், அதன் பிறகு இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT