நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, புதிய ஊரக வேலை உறுதி மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.படம்: பிடிஐ
புதுடெல்லி: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் அமளிக்கு இடையில் புதிய ஊரக வேலை உறுதி திட்ட மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இந்த திட்டத்தின் பெயரை, ‘விக் ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர்மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங் கியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மாற்றாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று, மகாத்மா காந்தி பெயரில் உள்ள திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு அனுப்பவேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் கடும் அமளிக்கு இடையில் அமைச்சர் அந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறும்போது, “மகாத்மா காந்தி எங்கள் இதயங்களில் வாழ்கிறார். மிகவும் ஒடுக்கப்பட்டவர்களின் நலன் தலையாய முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பது காந்திஜி மற்றும் பண்டிட்தீன்தயாள் ஆகிய இருவரின் முன்னுரிமையாக இருந்தது. நாங்கள் அவர்களின் கொள்கைகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அத்துடன் அவர்களது கொள்கைகளின் அடிப்படையில் பல வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்’’ என்றார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அடையும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் ஊரக உள்கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்தும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறும்போது, “மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆனால் அவர் என்குடும்ப உறுப்பினரைப் போன்றவர். இது ஒட்டுமொத்த நாட்டின் உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார்.
புதிய மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.
காப்பீடு மசோதா நிறைவேற்றம்: காப்பீட்டுத் துறையில் 74 சதவீதமாக உள்ள அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சப்கா பீமா சப்கி ரக்சா (காப்பீட்டுச் சட்டங்கள் திருத்தம்) சட்டம், 2025, மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு 100 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கும் நிலையில், புதிய மசோதா 125 நாள் வேலை வழங்க உறுதி அளிக்கிறது. இப்போதைய திட்டத்துக்கான முழு நிதியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், புதிய மசோதாவின்படி, மத்திய அரசும் மாநில அரசுகளும் (யூனியன் பிரதேசங்கள் உட்பட) 60:40 என்ற விகிதத்தில் நிதி சுமையை ஏற்க வேண்டும். அதேநேரம், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலையை ஒட்டிய மாநிலங்கள் (உத்தராகண்ட், இமாச்சல், ஜம்மு-காஷ்மீர்) 10 சதவீத நிதி வழங்கினால் போதும்.
ஊரக வேலை திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என புகார் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விவசாயப் பணி உச்சத்தில் இருக்கும் காலங்களில் இந்த திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதை மாநில அரசுகள் நிறுத்தி வைக்க புதிய மசோதா வகை செய்கிறது.
புதிய ஊரக வேலை திட்டப் பணிகள், விக் ஷித் பாரத் தேசிய ஊரக கட்டமைப்பு திட்டத்துடன் இணைக்கப்படும். குறிப்பாக, தண்ணீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், ஊரக உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான கட்டமைப்பு பணிகள், மோசமான காலநிலையை மட்டுப்டுத்தும் பணிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.