புதுடெல்லி: டெல்லி பிராந்தியத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் அப்பாவி மக்களிடம் இருந்து ரூ.1,250 கோடியை சைபர் மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது.
சமீப காலமாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. இதில் சமீபத்திய நிகழ்வாக டெல்லி ரோகிணி பகுதியில் வசிக்கும் 70 வயது முதியவர் மற்றும் அவரது மனைவியிடம் டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் மர்ம நபர்கள் ரூ.14.85 கோடியை மோசடி செய்தனர்.
இந்நிலையில் டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ”கடந்த 2024-ம் ஆண்டில் டெல்லி பிராந்தியத்தில் சைபர் மோசடி கும்பல் ரூ.1,100 கோடி மோசடி செய்தது. இந்த கும்பலில் பெரும்பாலானோர் கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் தங்கியிருந்து, சீனக் கூட்டாளிகளின் கட்டளைப்படி செயல்படுவோர் ஆவர்.
2025-ம் ஆண்டில் டெல்லி பிராந்தியத்தில் இந்த கும்பலால் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.1,250 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக மீட்கப்பட்ட பணமும் உயர்ந்துள்ளது. 2024-ல் மோசடி செய்யப்பட்ட தொகையில் 10 சதவீதம் மீட்கப்பட்டது. 2025-ல் இது 24 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2025-ல் நாடு முழுவதும் சைபர் மோசடி கும்பலால் மோசடி செய்யப்பட்ட தொகை சுமார் ரூ.20,000 கோடியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஒரு மாநிலத்தின் வரவு செலவு திட்டத்திற்கு இணையான தொகையாகும். இவ்வாறு அவர் கூறினார்.