இந்தியா

“அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் ரூ.5,000 கோடி கொள்ளை!” - அர்ச்சகர் மீது கார்கே குற்றச்சாட்டு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் ரூ.5,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த திருட்டில் கோயில் அர்ச்சகரே ஈடுபட்டிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை தொடர்ந்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேயும் ராமர் கோயில் விவகாரத்தை விமர்சித்துள்ளார். ராமர் கோயில் காணிக்கை கொள்ளை விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாகச் சாடினார்.

இது குறித்து கார்கே கூறியதாவது: ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, தற்போது அங்கு பரவலாகக் கொள்ளை நடைபெறுகிறது. ராமர் கோயிலில் இருந்து ரூ.5,000 கோடிக்கும் அதிகமான தொகை கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராமர் கோயிலின் அர்சகரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். அர்சகர்கள் ராமர் பெயரில் வழிபாடு நடத்துகிறார்கள், ஆனால் அதே பெயரில் கொள்ளையடிக்கிறார்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படும் இந்தக் கோயிலை பிரதமர் மோடிதான் திறந்து வைத்தார். மற்றவர்களின் சொத்துக்களை தங்களுடையது என்று உரிமை கோருவது, ராமரின் பெயரால் நடத்தப்படும் கொள்ளையாகவே உள்ளது.

கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடிப்பதற்காகவே இந்தக் கோயில் கட்டப்பட்டது. கோயில் உண்டியல்களில் சேரும் பணம் வேறு இடங்களுக்குச் செல்கிறது.

இதற்குப் பின்னால் அவர்களது ஆட்கள் இருக்கிறார்களா அல்லது வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். பொதுவாக கோயில்கள் சாமியார்கள் மற்றும் முனிவர்களால் திறந்து வைக்கப்படுகின்றன.

ஆனால், ராமர் கோயில் பிரதமர் மோடியாலேயே திறந்து வைக்கப்பட்டது. ராமரின் பெயரால் கொள்ளையடிப்பவர்களை சிறையில் அடையுங்கள். மக்கள் கடவுள், ராமர் கோயில் மற்றும் மதத்தின் பெயரால் வாக்களித்தார்கள். ஆனால், இவர்கள் மதத்தைக் காப்பாற்றுகிறார்களா?. மதத்தின் பெயரால் கொள்ளை நடக்கிறது, மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள்.

கடவுள் உங்களுடன் இருக்கிறார், ராமர் கோயில் உங்களுடன் இருக்கிறது, மோடி உங்களுடன் இருக்கிறார், நீங்களோ முதல்வராக இருக்கிறீர்கள். அப்படியிருக்க விசாரணைக்காக உங்களுக்கு ஏன் 15 நாட்கள் அவகாசம் தேவைப்படுகின்றன? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT