மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்
பாட்னா: சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு தொடர்கிறது என்று மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு இடஒதுக்கீடு முறையில் சீர்திருத்தம் வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடஒதுக்கீடு சாதி அடிப்படையில் அல்லாது குடும்பத்தின் வருவாய் அடிப்படையில் வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறை அனுமதி வழங்கிய நேரத்தை கடந்து போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாட்னா விமான நிலையத்தில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அதுகுறித்து அவர் கூறியதாவது:
இடஒதுக்கீடு முறையை ஒருசிலரின் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீடு முறையை முடிவுக்கு கொண்டு வர முடியாது. அது கருணை அடிப்படையிலானதும் அல்ல.
சமூக புறக்கணிப்பை எதிர்கொண்ட சமூகத்தின் சில பிரிவுகளை முன்னேற்றவே இடஒதுக்கீடு முறை அறிமுகமானது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை நமது தேசத்தின் அரசமைப்பு அடையாளம் கண்டு, அவர்களின் முன்னேற்றுக்கான ஆதாரமாக இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது.
நமது சமூகத்தில் சமூக ரீதியான புறக்கணிப்பு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வகையில் சமூக நீதிக்கான அரசமைப்புச் சார்ந்த கருவியாக இடஒதுக்கீடு தொடர்கிறது என்றார்.