மும்பை: மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளுக்கு கடந்த 15-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மட்டுமே அபார வெற்றி பெற்றிருக்கிறது. பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பின்னடைவை சந்தித்து உள்ளன.
மகாராஷ்டிராவின் 29 மாநகராட்சிகளில் மொத்தம் 2,869 வார்டுகள் உள்ளன. இதில் பாஜக 1,421 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கு 367, காங்கிரஸுக்கு 327, உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு 173, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 161, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 29, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவுக்கு 13 வார்டுகள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்தன.
மும்பை மாநகராட்சி தேர்தலில் மட்டும் பாஜக, சிவசேனா (ஷிண்டே) கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பல்வேறு மாநகராட்சிகளில் பாஜக கூட்டணி கட்சிகள் எதிரெதிர் அணியாக போட்டியிட்டன.
இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக மட்டும் அபார வெற்றி பெற்றிருக்கிறது. மொத்தமுள்ள 29 மாநகராட்சிகளில், 17 மாநகராட்சிகளில் அந்தக் கட்சி அறுதிப் பெரும்பான்மையை பெற்று உள்ளது. ஷிண்டே கட்சியுடன் இணைந்து மும்பை உட்பட மேலும் 8 மாநகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.
ஒரு காலத்தில் மும்பை, தானே பிராந்தியங்களில் பால் தாக்கரேவின் சிவசேனா மிகவும் வலுவாக இருந்தது. சிவசேனா உடைந்த பிறகும் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரேவுக்கு இந்த பிராந்தியங்களில் செல்வாக்கு நீடித்தது. ஆனால் தற்போதைய தேர்தலில் மும்பை, தானே பிராந்தியங்களில் தாக்கரே குடும்ப கட்சிகளை பின்னுக்கு தள்ளி அசைக்க முடியாத சக்தியாக பாஜக உருவெடுத்து இருக்கிறது.
மகாராஷ்டிராவின் புனே, சோலாப்பூர், கோலாப்பூர் பிராந்தியங்களில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த கட்சி உடைந்த பிறகு சரத் பவார், அவரது தம்பி மகன் அஜித் பவார் இந்த பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
தற்போதைய மாநகராட்சி தேர்தலில் சரத் பவாரும் அஜித் பவாரும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். ஆனால் இருவருமே பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். புனே, சோலாப்பூர், கோலாப்பூரில் பாஜகவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்திருக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக மட்டுமே அபார வெற்றி பெற்றிருக்கிறது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா தானே மாநகராட்சியுடன் முடங்கி உள்ளது. மற்றொரு துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு மாநகராட்சியைக்கூட கைப்பற்றவில்லை.
மாநகராட்சித் தேர்தலின்போது சிவசேனா உத்தவ் அணியின் வாக்குகள், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் வாக்குகள் பாஜகவுக்கு கைமாறி இருக்கிறது. இதன்காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மட்டும் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் புதிய மேயர் யார்? - கடந்த 30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி பால் தாக்கரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. முதல்முறையாக இந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றி உள்ளது.
மொத்தமுள்ள 227 வார்டுகளில் பாஜக 89 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டே வின் சிவசேனா 29 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. மும்பை மாநகராட்சியில் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணிக்கு 118 கவுன்சிலர்களின் ஆதரவு உள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் தேஜஸ்வி, பிரகாஷ், பிரபாகர் ஷிண்டே, மகரந்த் நவரேகர், ராஜ் ஆகியோர் மேயர் பதவிக்கான போட்டியில் முன்வரிசையில் உள்ளனர். புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கட்சி தலைமையுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
‘கடவுள் விரும்பினால்…’ - உத்தவ் பேச்சு: சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது: மும்பையை பாஜக அடமானம் வைக்க விரும்புகிறது. துரோகத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. இந்த பாவத்தை மராட்டிய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மும்பையில் நமது கட்சியின் மேயரை நிறுவுவது எனது கனவு.
கடவுள் விரும்பினால் அந்தக் கனவு நனவாகும். நமது கட்சியை ஒழித்துவிட்டதாக பாஜக நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. பாஜக அனைத்து வழிகளையும் பயன்படுத்தியது. ஆனால் விசுவாசத்தை அக்கட்சியால் வாங்க முடியவில்லை. இந்தப் போர் முடிவடையவில்லை, அது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.