சந்திரநாத் சின்ஹா | கோப்புப் படம்

 
இந்தியா

“வட மாநிலங்களில் ராமர்... மேற்கு வங்கத்தில் காளி” - பாஜகவை விமர்சித்த திரிணமூல் காங். மூத்த தலைவர்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: வட மாநிலங்களில் ராமரின் பெயரால் வாக்குகளைக் கோரும் பாஜக, மேற்கு வங்கத்தில் காளியின் பெயரால் அதைச் செய்வதாகவும், இங்கு ராமரின் பெயரை பயன்படுத்தினால் ஓட்டு கிடைக்காது என்பதை அக்கட்சி உணர்ந்துவிட்டதாகவும் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில அமைச்சருமான சந்திரநாத் சின்ஹா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்​கத்​தில் 294 தொகு​தி​களுக்​கான சட்​டப்​பேரவைத் தேர்தல் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் இரண்டு கட்​டங்​களாக நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறிவித்​துள்​ளது. அங்கு ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது.

தேர்தல் பிரச்சாரம் மாநிலத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், கொல்கத்தாவின் போல்பூர் நகராட்சியின் 20-வது வார்டில் பிரச்சாரம் மேற்கொண்ட சந்திரநாத் சின்ஹா, ‘‘ஒரே விஷயம்தான் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. எங்களுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை என பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்துகளைத் தூண்டிவிடும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்படுகிறது. பாஜக ஒரு மதவாதக் கட்சி.

          

அது போலியான மதப்பற்று குறித்து பெருமை பேசுகிறது. இம்முறை, பிரதமர் நரேந்திர மோடி இங்கு வந்தபோது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கமிடவில்லை, மாறாக 'ஜெய் மா காளி' என்றே முழக்கமிட்டார்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் அவர் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கமிட்டிருந்தார். இதன் மூலம், பாஜக என்பது ஒரு வட இந்தியக் கட்சி என்பதையும், ராமர் ஒரு வட இந்தியக் கடவுள் என்பதையும் அறிய முடிகிறது.

அதனால்தான் அவர்கள் முன்பு ராமர் பெயரைப் பயன்படுத்தினர். மேற்கு வங்கத்தில் ராமர் பெயரைப் பயன்படுத்தினால் பலன் கிடைக்காது என்பதை இப்போது அவர்கள் உணர்ந்துவிட்டனர்.

ஆனால், துர்கா பூஜையை முன்னிட்டு மம்தா பானர்ஜி பல்வேறு மன்றங்களுக்கு நிதியுதவி அளித்து வருவதால், துர்கா தேவியின் பெயரையும் பயன்படுத்தினால் பலன் கிடைக்காது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர்.

மேற்கு வங்கத்தில் நாம் அனைவரும் 'மா காளி'யின் பக்தர்கள். அதனால்தான் இப்போது அவர்கள் 'மா காளி'யின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். மதத்தின் பெயரால் அவர்கள் வாக்குகளை வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

அவரது இந்த கருத்தை பாஜக வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தகைய கருத்துக்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பாஜகவின் மாவட்டத் தலைமையும் இதற்குத் தீவிரமாக எதிர்வினையாற்றியுள்ளது. சந்திரநாத் சின்ஹாவை கடுமையாக விமர்சித்த அவர்கள், அவருக்கு மனநலம் சரியில்லை என விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரம் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் விவாதங்களை உருவாக்கி உள்ள நிலையில், தனது கருத்து குறித்து சந்திரநாத் சின்ஹா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT