ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா
திருவனந்தபுரம்: கடந்த இருப்பது ஆண்டுகால இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் மீது கேரளம் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். கேரளம் மாநில தேர்தலை முன்னிட்டு அவர் சனிக்கிழமை அன்று திருவனந்தபுரம் வந்திருந்தார்.
அப்போது செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் இன்று திருவனந்தபுரத்தில் உள்ளேன். எங்கள் கட்சியின் மாநில தலைவர் உட்பட நான்கு பேர் இன்று தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். எங்கள் கட்சியின் உறுப்பினர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இங்கு கடந்த 20 ஆண்டுகால ஊழல் நிறைந்த இடதுசாரி மற்றும் காங்கிரஸ் ஆட்சியின் மீது கேரளம் மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதே நேரத்தில் மக்கள் பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் பிரதமர் மோடியை நம்புகின்றனர். இங்குள்ள வளர்ச்சி பணிகளுக்கு அவரே காரணம். பாஜக ஆதரவு இல்லாமல் இங்கு மாநில அரசு அமையாது என்பதை நாங்கள் சொல்வோம். இங்கு பாஜக வலுவடைந்துள்ளது. மற்ற மாநிலங்களை போலவே கேரளம் வளர்ச்சி காணும்” என தெரிவித்தார்.
140 தொகுதிகள் கொண்ட கேரளம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்.9-ம் தேதி அன்று நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி உடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) மற்றும் வேறு சில கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன.