இந்தியா

“காலனித்துவ மனநிலையில் இருந்து விடுபட ராஜாஜி ஓர் ஊக்கம் தரும் உதாரணம்” - குடியரசுத் தலைவர் முர்மு

மோகன் கணபதி

புதுடெல்லி: காலனித்துவ மனநிலையில் இருந்து விடுபட ராஜாஜி ஓர் ஊக்கமளிக்கும் உதாரணம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரலான ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு சிலை குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவால் இன்று (பிப். 23) திறக்கப்பட்டது. ஆங்கிலேயரான எட்வின் லுட்யன்ஸின் மார்பளவு சிலை அகற்றப்பட்டு, அந்த இடத்தில் ராஜாஜியின் சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டது. விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நட்டா, ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், கஜேந்திர சிங் ஷெகாவத், எல். முருகன், ராஜாஜியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக ராஜாஜி உற்சவம் என்ற பெயரில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ‘‘குடியரசுத் தலைவர் மாளிகையில் நிறுவப்பட்ட ராஜாஜியின் சிலையைத் திறந்து வைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அவருக்கு மரியாதையுடன் கூடிய எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவரை கவுரவிப்பதன் மூலம் இந்தியாவின் சுயமரியாதையை நாங்கள் கவுரவித்துள்ளோம்.

          

ராஜாஜி, அரசாங்க மாளிகையில் உள்ள தனது அறையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் மகாத்மா காந்தியின் உருவப்படங்களை வைத்தார். இதன்மூலம், இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் சேவை பாரம்பரியத்துக்கு இங்கு மிக உயர்ந்த இடத்தை வழங்கினார். இந்தியாவின் பாரம்பரியத்தில் பெருமை கொள்ளவும், அடிமை மன நிலையின் எச்சங்களை அகற்றவும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்ட தேசிய பிரச்சாரத்தில் ராஜாஜியின் லட்சியங்கள் பிரகாசிக்கின்றன.

அந்நிய ஆட்சியின்போது பொதுமக்களிடம் இருந்து எட்டி நிற்பது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே கடைப்பிடித்த ஒரு நடைமுறை. ஆனால், நமது சுதந்திர பாரதத்தில் ஒவ்வொரு நபருடனும் இணைவது நமது கொள்கை. குடியரசுத் தலைவர் மாளிகை என்பது நாட்டின் கட்டிடம். இது நாட்டு மக்கள் அனைவரின் கட்டிடம் என்று நான் நம்புகிறேன். இந்த கட்டிடத்தின் கதவுகள் நாட்டு மக்கள் அனைவரையும் வரவேற்க திறந்திருக்கும்.

பன்முக படைப்பாற்றலையும் பல்வேறு பரிணாமங்களையும் கொண்டவராக ராஜாஜி திகழ்ந்தார். சட்டத்துறை, சுதந்திரப் போராட்டம், சமூகம் மற்றும் பொருளாதார சீர்திருத்தம், பண்டைய இந்திய வேதங்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம், கவிதை மற்றும் இசை, அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் என தனது பங்களிப்புகள் மூலம் அவற்றை அவர் வளப்படுத்தினார். 2047க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற லட்சியத்தை நோக்கி நாம் முன்னேறிச் செல்லும்போது, ராஜாஜி போன்ற பெரும் தலைவர்களின் கருத்துக்களும் லட்சியங்களும் நம்மை ஊக்குவிக்கின்றன. ராஜாஜியின் கனவுகளை நிறைவேற்ற உணர்வை ஊக்குவிக்க நாம் உறுதிபூண்டுள்ளோம்’’ என தெரிவித்தார்.

விழாவில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ‘‘ராஜாஜியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டிருப்பது காலனித்துவ செல்வாக்கை கைவிடுவதில் மற்றொரு முக்கியமான நடவடிக்கை. காலனித்துவ மனநிலையிலிருந்து வெளியேறுவது என்ற இந்தியாவின் இயக்கம் ஒரு நிகழ்வாக மட்டும் இருக்காது. ஆட்சி, சட்டம், கல்வி, கலாச்சாரம், தேசிய அடையாளம் என அனைத்திலும் மாற்றங்கள் நிகழும்.

இந்த சீர்திருத்தங்களின் மையம், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது. காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட வேண்டும் என்று பிரதமர் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறார். இது பிரிட்டிஷ் ஆட்சிக்கால நிறுவனங்கள் மற்றும் அணுகுமுறைகளை மாற்றியமைக்கிறது.

ராஜ்பவன் என்பது மக்கள் மாளிகை என மாற்றியது, பிரதமர் அலுவலகம் சேவை தீர்த்தமாக பரிணமித்தது, மத்திய செயலகம் கடமை மாளிகையாக மறுபெயர் சூட்டப்பட்டது. இதேபோல், காலனித்துவ காலத்தின் குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டன. இவை வெறும் அடையாளப்பூர்வமானவை அல்ல, இவை அரசின் உணர்வைப் பிரதிபலிக்கின்றன.

ராஜாஜி விழா என்பது இந்தியாவின் மகத்தான மனிதருக்கு அளிக்கப்படும் சரியான அங்கீகாரம். சி ராஜகோபாலாச்சாரி, நாட்டின் வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளார். வழக்கறிஞராக, சுதந்திரப் போராட்ட வீரராக, ராஜதந்திரியாக, அரசியல்வாதியாக, எழுத்தாளராக, ராஜாஜியின் பன்முகத் திறமை மிகவும் விரிவானது. இந்தியாவின் பொருளாதார கொள்கை, சுதந்திரமானதாகவும், தாராளமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ராஜாஜியின் வாழ்க்கை நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT