புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் அலுவலகம், அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த வியாழக் கிழமை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையிட்டு விசாரணைக்கு இடையூறு செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த சனிக்கிழமை மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை நேற்று தாக்கல் செய்த மனுவில், “ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோதனையை தடுத்தது மற்றும் ஆதாரங்களை அழித்ததற்காக முதல்வர் மம்தா, மாநில காவல் துறை இயக்குநர் மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். சட்டத்தை பாதுகாக்க வேண்டியர்களே கடும் குற்றத்துக்கு உடந்தையாகிவிட்டனர்.
அவர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகளை அச்சுறுத்தி கோப்புகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகினோம். அப்போது நீதிமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் நீதிபதிக்கு ஏற்பட்டது” என்று கூறியுள்ளது.