மும்பை: மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ‘சத்ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்களின் குரல்) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பேசிய ராகுல் காந்தி, மனுஸ்மிருதி மனநிலையை கடுமையாகச் சாடினார். அத்துடன் “ஆணாதிக்க சிந்தனையைத் தகர்க்க வேண்டும்” என்று பெண்களுக்கு அழைப்பு விடுத்ததுடன், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய பெண் விளையாட்டு வீரர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளையும் விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், “புனேயில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியது அரசியல் காமெடியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்துவிட்டு, வெளியே வந்து மகளிர் அதிகாரம் பற்றிப் பேசுவது ராகுல் காந்தியின் போலித்தனமான நிலைப்பாட்டையே காட்டுகிறது. தொலைக்காட்சிகளில் மட்டுமே தங்களைத் தக்கவைத்துக்கொள்ளத் துடிக்கும், திசையற்ற மற்றும் வெற்று ஆரவாரம் செய்யும் கட்சியாக காங்கிரஸ் மாறியுள்ளது” என்றார்.
தூக்கம் தொலைத்த பாஜக...
காங்கிரஸ் தேசியச் செயலாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், “மகாராஷ்டிர அரசு போக்குவரத்துத் தடைகளும், பிற கெடுபிடிகளும் விதித்தபோதிலும், ராகுல் காந்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையிலான மக்களின் ஆதரவு கிடைத்ததைக் கண்டு பாஜக தூக்கத்தை தொலைத்துள்ளது” என்றார்.