ஆலப்புழா: கேரளாவில் ஏப்.9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆலப்புழாவில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: இன்று பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதை அனைவரும் பார்க்க முடிகிறது.
ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் (எல்டிஎப்) சந்தர்ப்பவாதிகள் அல்லாத, பல ஆண்டுகளாக அந்த சித்தாந்தத்துக்காக உழைத்த தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் இன்று ஏமாற்றப்பட்டதாகவும், காயப்படுத்தப்பட்டதாகவும், துரோகம் இழைக்கப்பட்டதாகவும் உணர்கின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) முன்பு எல்டிஎப்-ஐ ஒரு சித்தாந்த ரீதியான எதிரியாக எதிர்கொண்டது. ஆனால் இப்போது அந்த முன்னணி மாறிவிட்டது.
எல்டிஎப் என்றால் என்ன? இடதுசாரி ஜனநாயக முன்னணி. இப்போது, உண்மையைச் சொல்லப்போனால், எல்டிஎப்-ல் 'இடதுசாரி' என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. இந்தத் தேர்தலுக்குப் பிறகு, அதில் எதுவுமே மிஞ்சப் போவதில்லை. மேலும், ஒரு 'மறைமுகக் கை' எல்டிஎப்-ஐ வழிநடத்துகிறது. அந்த மறைமுகக் கை வகுப்புவாதத்தை ஊக்குவிப்பது; அது இந்திய அரசியலமைப்பை ஏற்பதில்லை, மக்களைப் பிரிக்கிறது மற்றும் வெறுப்பைப் பரப்புகிறது. பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் சிபிஐ (எம்) இடையேயான தொடர்பை கேரளாவில் உள்ள அனைவரும் பார்க்க முடியும்.
மற்ற மாநிலங்களில் மதம் மற்றும் கோயில்களைப் பற்றிப் பேசும் பிரதமர் மோடி, சபரிமலை தங்கம் திருடு போன விவகாரம் போன்ற கேரளாவின் பிரச்சினைகளில் மவுனம் காக்கிறார். நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்துப் போராடுகிறேன்.
அவர்கள் என்னை விமர்சிக்கின்றனர், வழக்குகள் பதியப்படுகின்றன. நான் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறேன். ஆனால் நான் பின்வாங்க மாட்டேன். மோடி தினமும் என்னைத் தாக்கி பேசுகிறார். ஆனால் அவர் ஏன் கேரள முதல்வரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ தாக்கிப் பேசுவதில்லை?
பிரதமர் மோடி கேரளாவுக்கு வரும்போது, அதையெல்லாம் மறந்து விடுகிறார். ஏனெனில் அவர் எல்டிஎப்-க்கு உதவ விரும்புகிறார். உண்மை என்னவென்றால், தேசிய அளவில் எல்டிஎப் ஒருபோதும் பாஜகவுக்கு சவாலாக உருவெடுக்காது என்பது அவருக்குத் தெரியும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.