புனேவில் நடைபெற்ற ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்ட காட்சி
புதுடெல்லி: இந்தியாவின் கல்வி அமைப்பு எந்த தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ அதே தலைமுறையை கைவிடுகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘மாணவர் குரல்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஏற்கெனவே ராஜஸ்தானின் கோட்டா, உத்தராகண்ட்டின் டேராடூன், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், மகாராஷ்டிராவின் புனே ஆகிய நகரங்களில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சி மூலம் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக வரும் 19-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற உள்ள ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் அவர் மாணவர்களைச் சந்திக்க இருக்கிறார்.
இந்நிலையில், ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் கல்வி அமைப்பு எந்த தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ, அந்த தலைமுறையை கைவிடுகிறது. வினாத்தாள் கசிவு, தாங்க முடியாத கல்விக் கட்டணம், சிதிலமடைந்த உள்கட்டமைப்பு வசதிகள் என பல சிக்கல்கள் உள்ளன. லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் நேர்மையாக உழைத்தாலும் இந்த அமைப்பு அவர்களை ஏமாற்றவே செய்கிறது.
இதைச் சரிசெய்வதற்கான முதல் படி, இதன் குறைபாடுகளை தினமும் அனுபவிப்பர்களின் கருத்துக்களுக்கு செவிமடுப்பதே.
மாணவர்களே, பெற்றோர்களே, ஆசிரியர்களே... கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கையை நீங்கள் இழக்க காரணம் என்ன என்பதை என்னிடம் கூறுங்கள்.
இதற்கான https://rahulgandhi.in/awaazbharatki/chattronkigoonj என்ற இணைய இணைப்பின் வாயிலாக உங்கள் அனுபவங்கள், ஆதாரங்கள், யோசனைகள் ஆகியவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். நாம் இணைந்து நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.