கரப்பான்பூச்சி ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர்கள்

 
இந்தியா

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

வெற்றி மயிலோன்

புது டெல்லி: நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, இந்த வார இறுதியில் டெல்லியில் போராட்டம் நடத்தத் தயாராகி வருவதாகவும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசு மற்றும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே ஜூன் 6-ஆம் தேதி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், புது டெல்லியில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் முதல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளரும், பத்திரிகையாளருமான சவுரவ் தாஸ், “நாங்கள் அனைவருக்கும் வெளிப்படையான அழைப்பை விடுத்துள்ளோம். கட்சிச் சின்னம் அல்லது பதாகைகள் ஏதுமின்றி யார் வேண்டுமானாலும் எங்களுடன் போராட்டத்தில் இணையலாம். அதிகாரத்தில் இருப்பவர்களோ அல்லது எதிர்க்கட்சியினரோ, யாராக இருந்தாலும் சரி, அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஜூன் 2 அன்று சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகியோரை இடமாற்றம் செய்ய மத்திய அரசு எடுத்த முடிவு, ஒரு கண் துடைப்பு நாடகம். இதனால் பிரச்சினைகள் தீராது. நாங்கள் இந்த பிரச்சினைக்கு பொறுப்புடைமையை வலியுறுத்துகிறோம்.

கல்வி அமைச்சரின் ராஜினாமாவை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்; ஆனால் இன்றுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பணியிட மாற்றங்கள் ஏதோ நடவடிக்கை எடுக்கப்பட்டதைப் போலச் சித்தரிக்கப்படுகின்றன. ஆனால், இந்த அமைப்பிற்குள்ளேயே ஒரு சீர்கேடு ஊடுருவியுள்ளது" என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT