இந்தியா

குடியரசுத் தலைவர் பிறந்தநாள்: திரவுபதி முர்முவின் கிராமத்துக்குச் சென்ற பிரதமர் மோடி

மோகன் கணபதி

புதுடெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் பிறந்த நாளான இன்று, அவர் பிறந்த ஒடிசாவின் உபர்பேடா கிராமத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார்.

கிராமத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் திரவுபதி முர்முவுடன் இணைந்து கலந்துகொண்ட நரேந்திர மோடி, அங்குள்ள கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து பழங்குடி மக்களின் இசை மற்றும் நடனத்தைக் கண்டு களித்தார்.

இதையடுத்து, மயூர்பஞ்ச்சில் நடைபெற்ற ஒடிசா அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “ஒடிசாவில் பாஜக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சூழலில் மயூர்பஞ்ச்சுக்கு வருவதும் உங்களோடு இருப்பதும் பெருமைக்குரிய விஷயம். நீங்கள் இவ்வளவு பெருந்திரளாகக் கூடி இருப்பது இந்த தருணத்தை எனக்கு மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது. உங்கள் அன்பு என்னை மீண்டும் மீண்டும் இங்கு வரவழைக்கிறது.

இரட்டை இன்ஜின் ஆட்சியின் கீழ் நடைபெறும் வளர்ச்சிப் பயணத்துக்காக ஒடிசா மக்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் அரசு இந்திய அரசியலமைப்பை சந்தாலி மொழியில் (பழங்குடி மக்கள் அதிகம் பேசும் மொழி) வெளியிட்டுள்ளது.

ஒடிசாவின் மகன்களுக்கும் மகள்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. ஒடிசாவின் மகத்தான ஆளுமைகளின் கனவுகளை நனவாக்க ஒடிசா அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு பகலாக உழைத்து வருகிறது.

மயூர்பஞ்ச் மண்ணில் பிறந்த வளர்ந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடனும் சிறந்த ஆரோக்கியத்துடனும் திகழ நான் பிரார்த்திக்கிறேன். அவர் இன்று நம்முடன் இருப்பதால் இன்றைய நிகழ்வு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஒடிசாவின் புதல்வியான அவர், இன்று நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்து நம் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார். இது நம் அனைவருக்கும் மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும்.

குடியரசுத் தலைவரின் ஆளுமை, அவரது தாராள மனப்பான்மை, கருணைமிக்க குணம், நாட்டுக்கும் சமூகத்துக்கும் சேவை செய்வதில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை மயூர்பஞ்ச்சின் அடையாளத்தை மட்டுமல்ல, ஒடிசாவின் அடையாளத்தையும் வலுப்படுத்தியுள்ளன. குடியரசுத் தலைவரின் பிறந்தநாள் என்பதால் இன்று அவரது கிராமத்துக்குச் சென்று அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

இன்று நான் குடியரசுத் தலைவருடன் பஹத்பூருக்குச் சென்றேன். அப்பகுதி குழைந்தைகளுக்காக அவர் கட்டிய பள்ளியையும் நான் பார்வையிட்டேன். குழந்தைகளுடன் சில மறக்க முடியாத தருணங்களைச் செலவிடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

அங்கு குடியரசுத் தலைவர் வந்திருக்கிறார் என்று எந்த குழந்தையும் நினைக்கவில்லை. மாறாக, தங்கள் தாய் வந்திருக்கிறார் என்ற உணர்வே ஒவ்வொரு குழந்தையிடமும் இருந்தது. இப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய, பழங்குடியின சமூகங்களின் குழந்தைகள் எவ்வாறு ஊக்கம் பெறுகிறார்கள் என்பதையும், நாட்டுக்காக பெரிய அளவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையைப் பெறுகிறார்கள் என்பதையும் காண முடிந்தது. இத்தகைய அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கிய குடியரசுத் தலைவருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய நாள் எனக்கு ஒரு வகையில் ஒரு பாடத்தைக் கற்றுத் தரும் நாளாக அமைந்தது. பஹத்பூர் கிராமம் இனி சூரிய சக்தி கிராமமாக விரைவாக மேம்படுத்தப்பட உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சூரிய சக்தி மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படும். இது கிராம மக்களுக்கு இலவச மின்சாரத்தை வழங்கும். மேலும், உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரம் அவர்களுக்கு வருமான ஆதாரமாகவும் அமையும்.

இன்று, ஒடிசாவின் வளர்ச்சிக்கான பல முக்கிய திட்டங்களின் தொடக்க விழாவும், அடிக்கல் நாட்டு விழாக்களும் நடைபெற்றுள்ளன. இத்திட்டங்களுக்காக சுமார் 47,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல பிரம்மாண்ட திட்டங்களுக்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. ஒடிசாவின் பொருளாதாரம் வலுப்பெற்றால் இந்தியாவும் வலுப்பெறும்.

நாளை சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. ஒடிசா மண்ணில் இருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும், உலக மக்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் அனைவரும் யோகா தினத்தில் முடிந்தவரை அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும்” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT